திருநெல்வேலி: கத்தோலிக்க திருச்சபையின் பாளையங்கோட்டை மறைமாவட்ட புதிய ஆயராக எஸ்.அந்தோனிசாமி ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.
பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயராக இருந்த ஜூடு பால்ராஜ் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி பணி நிறைவு பெற்றார். இந்நிலையில் புதிய ஆயராக எஸ்.அந்தோனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.
புதிய ஆயருக்கான திருநிலைப்பாட்டு விழா பாளையங்கோட்டையில் கோலாகலமாக நடைபெற்றது. மதுரை உயர் மறைமாவட்டப் பேராயர் அந்தோனி பாப்புசாமி புதிய ஆயரை திருநிலைப்படுத்தினார். புதுச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்டப் பேராயர் அந்தோனி ஆனந்தராயர் மறையுரையாற்றினார்.
ஆயருக்கு இறைமக்கள், அருள்சகோதரர்கள், சகோதரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
புதிய ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எஸ்.அந்தோனிசாமி, தூத்துக்குடி மாவட்டம் வண்டானம் கிராமத்தில் 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி பிறந்தவர். இவரது பெற்றோர் சவரிமுத்து-மரியம்மாள். மதுரை புனித பேதுரு இளங்குரு மடத்தில் பயின்ற இவர், 1987 ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு பெற்றார். 1992 முதல் 2000 ஆண்டு வரை பிரான்ஸ் நாட்டில் உயர்கல்வி பெற்று திருச்சபை சட்டங்கள் பற்றிய கல்வியில் முனைவர் பட்டம் பெற்றார்.

No comments:
Post a Comment