துப்பாக்கியை காட்டி மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் எம்.எல்.ஏ வுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்தவர் முன்னாள் தி.மு.க., எம்.எல்.ஏ. ஏ.அசோகன். இவரது இரண்டாவது மனைவி ஹேமா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அசோகன் தனது முதல் மனைவி சிந்துஜா உடன் தனியே வசித்து வருகிறார்.
இந்த நிலையில் 2015, டிசம்பர், 6ம் தேதி, தனது கணவரின் உதவியாளரை அழைத்துக் கொண்டு, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, பால், பிஸ்கட் வழங்க சென்றுள்ளார் ஹோமா. உதவிப் பொருள்களை வழங்கிவிட்டு வீட்டிற்கு வர, இரவு 11:00 மணி ஆகி உள்ளது. அப்போது, மது போதையில் இருந்த அசோகன், ஹோமா மீது சந்தேகப்பட்டு, தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும், ஹேமாவின் தாயார் இருவரையும் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு, தன் கைத்துப்பாக்கியால் மிரட்டி உள்ளார். இதையடுத்து, ஹேமா பயந்து, தனது தாயாரை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது, வீட்டிற்குள், இரண்டு முறை துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டுள்ளது. இது குறித்து, பட்டினப்பாக்கம் காவல்துறையில் ஹேமா புகார் அளித்தார். இதன் அடிப்படையில் அசோகன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை, விசாரித்த எம்.பி, எம்.எல்.ஏ.களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் 22 ஆம் தேதி அசோகனுக்கு எதிரான குற்றசாட்டுக்கள் காவல்துறை தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டுள்ளது எனவே குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிப்பதாக தீர்ப்பளித்தது.
சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அசோகன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அதில் விசாரணை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் மேல் முறையீடு காலம் முடிவடையும் வரை தண்டனை நிறுத்திவைக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி சிறப்பு நீதிமன்றம் விதித்த மூன்று ஆண்டு சிறை தண்டனை நிறுத்திவைத்து உத்தரவிட்டார். மேலும் மனு தொடர்பாக பட்டினப்பாக்கம் காவல் துறை பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை 8 வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

No comments:
Post a Comment