மாதம்தோறும் கூட்டப்படும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் ஜி.எஸ்.டி வரிவிகிதத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவது வழக்கம். அப்படிக் கொண்டுவரப்படும் மாற்றங்களின் பயனை நுகர்வோருக்குக் கடத்த வேண்டியது தயாரிப்பு நிறுவனங்களின் பணி. அதைச் செயல்படுத்தத் தவறிய குற்றத்துக்காக ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்துக்கு ரூ.230 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எந்தப் பொருளுக்கும் ஜி.எஸ்.டி விகிதம் குறைக்கப்படும்போது அதை உடனடியாக அந்தப் பொருள்களில் பிரின்ட் செய்து, விலையைக் குறைத்து விற்பனை செய்யப்பட வேண்டும். சில நிறுவனங்கள் ஜி.எஸ்.டி விகிதத்தைக் குறைத்துக் காட்டுவதோடு, பொருளின் விலையை உயர்த்தி, ஏற்கெனவே உள்ள விலையிலேயே விற்பனை செய்வது போன்ற முறைகேட்டில் ஈடுபடுவார்கள். இன்னும் சில நிறுவனங்கள், ஜி.எஸ்.டி விகிதத்தைக் குறைக்காமல் பழைய விகிதத்திலேயே விற்பனை செய்வார்கள். ஆனால், கணக்கில் காட்டும்போது ஜி.எஸ்.டி விகிதத்தைக் குறைத்துக்காட்டுவார்கள். இப்படிச்செய்வதால் ஜி.எஸ்.டி விகிதத்தைக் குறைத்ததன் பலனை அந்த நிறுவனங்களே அனுபவித்து கூடுதல் ஆதாயம் பெறுகின்றன.
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் சில தயாரிப்புகளுக்கு ஜி.எஸ்.டி வரி விகிதம், கடந்த 2017, நவம்பர் 15 முதல், 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஜி.எஸ்.டி விகிதக்குறைப்பின் பலனை நுகர்வோருக்குக் கடத்தாமல் மோசடி செய்ததை, ஆன்டி-ப்ராஃபிட்டரிங் அத்தாரிட்டி (NAA - National Anti-profiteering Authority) அமைப்பு கண்டறிந்தது. எனவே, அந்த நிறுவனத்துக்கு, ஜி.எஸ்.டி சட்டம் 171(3A) பிரிவின்படி ரூ.230 கோடி அபராதம் விதித்துள்ளது.
ஏற்கெனவே இம்மாதத் தொடக்கத்தில்தான் இதேபோன்ற குற்றச்சாட்டுக்காக பிரபலமான நெஸ்லே (இந்தியா) நிறுவனத்துக்கு ரூ.90 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment