தேனியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, பள்ளி செல்லும் முன்பு நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.
தேனியில் 4-ம் வகுப்பு படிக்கும் சிறுமி அவந்திகா. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பள்ளிக்குச் செல்லும் முன்பு ஷூவை அணிய முயன்றுள்ளார். ஷூவுக்குள் அவர் காலை நுழைத்தபோது பாதத்தில் ஏதோ நெளிவது போலத் தோன்றியுள்ளது, மெலிதான சப்தமும் கேட்டுள்ளது.
உடனடியாக தனது அம்மாவிடம் இதுகுறித்துத் தெரிவித்துள்ளார். பெற்றோர் பார்த்தபோது ஷூவுக்குள் பாம்பு இருந்தது தெரியவந்தது. ஒரு பாத்திரத்தைக் கொண்டு ஷூவை மூடிய அவர்கள், உடனடியாக பாம்பு பிடிப்பவரிடம் தகவலைத் தெரிவித்துள்ளனர்.
பாம்பு பிடிப்பவர் வந்து பார்த்தபோது, அது 2 அடி நீளம் கொண்ட நாக பாம்பு என்று தெரிய வந்தது. விஷத் தன்மை கொண்ட பாம்பு, பின்னர் வனப்பகுதியில் கொண்டுபோய் விடப்பட்டது.
சமூக ஆர்வலர்கள் இதுகுறித்துக் கூறும்போது, ''மழைக்காலங்களில் பாம்பு, பூச்சி உள்ளிட்ட உயிரினங்கள் தங்களைக் கதகதப்புடன் வைத்துக்கொள்ள, இதுபோன்று ஷூக்களுக்குள் செல்ல அதிக வாய்ப்புண்டு. பள்ளி செல்லும் மாணவர்கள் ஷூ, சாக்ஸ் ஆகியவற்றைக் கவனத்துடன் பரிசோதித்து அணிந்துகொள்ள வேண்டும்'' என்றனர்.

No comments:
Post a Comment