பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி தேர்தல் ஆணையத்தின் மீது திமுக தலைவர் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மத்திய நிதிநிலை அறிக்கைக்கு முந்தைய மாநில நிதியமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடை பெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளரிடம் அவர்கூறியதாவது: டெல்லியில் ஒவ்வொரு நிதியாண்டும் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன், மாநில அரசின் கருத்துகளை, மாநில அரசின் திட்டங்களுக்கான நிதிகள் குறித்து ஆலோசிப்பது மரபாகும்.
இக் கூட்டத்தில் தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதி மற்றும் பல்வேறு திட்டங்கள் மூலமாக தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியையும் கேட்டுப் பெற உள்ளோம்.
சமீபகாலமாக, அரசு மீது தேவையற்ற, உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை ஸ்டாலின்கூறி வருகிறார். அதுபோல்தான் மாநில தேர்தல் ஆணையத்தின் மீதும் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்ட மசோதா தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுவதால் அதுகுறித்து இப்போது பேச முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment