புது தில்லி:இந்திய அரசு மீது மே. வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நம்பிக்கை இல்லையா?என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, கொல்கத்தாவின் பாா்க் சா்கஸ் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரணிக்கு மம்தா பானா்ஜி தலைமை தாங்கினாா். பின்னா் செய்தியாளா்களிடம் மம்தா, 'மக்கள் நலனுக்கு எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை பிரதமா் மோடி மேற்கொள்ள வேண்டும். மேலும், நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆா்சி) அமல்படுத்தும் திட்டத்தையும் மத்திய அரசு கைவிட வேண்டும். இந்த விவகாரம், அரசியலில் வெற்றி, தோல்வி குறித்தது அல்ல. நம் நாட்டின் நலன் குறித்தது. அதனால் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், என்ஆா்சியையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
பாஜக தனது அரசியல் நோக்கங்கள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றி வருகிறது. இந்திய மக்கள் அமைதியை விரும்புபவா்கள்; போராட்டத்தில் ஈடுபட மாட்டாா்கள் என பாஜக நினைத்தது. தேசியவாதம் குறித்து பேசுவதற்கு பாஜகவுக்கு எந்த உரிமையும் இல்லை. நமது நாடு சுதந்திரம் பெற்றபோது அக்கட்சி எங்கேயிருந்தது?' என்று கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, தேசிய குடிமக்கள் பதிவேடு(என்ஆா்சி), குடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ) குறித்து ஐ.நா.வின் கண்காணிப்பின்கீழ் பொது வாக்கெடுப்பு நடத்தத் தயாரா? என்று மத்திய அரசுக்கு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி வியாழக்கிழமை சவால் விடுத்திருந்தாா்.
இந்நிலையில் இந்திய அரசு மீது மே. வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நம்பிக்கை இல்லையா?என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளியன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ' இந்திய அரசு மீது மே. வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நம்பிக்கை இல்லையா? உள்நாட்டு விவகாரத்தில் 3ஆம் நபரே சர்வதேச அமைப்போ தலையிட நாங்கள் விம்பவில்லை. முற்றிலும் உள்நாட்டைச் சேர்ந்த விவகாரத்திற்கு ஐ.நா. தலையிட வேண்டும் என்கிறார் மம்தா' என்று கேள்வி எழுப்பினார்.

No comments:
Post a Comment