𝑫𝒆𝒔𝒊𝒂𝒌𝒂𝒕𝒉𝒊𝒓 𝑵𝒆𝒘𝒔: 19.12.2019
செங்குன்றம்:
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது.
தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளன. வேட்பு மனுக்களை திரும்ப பெற இன்று கடைசி நாள் ஆகும். இதைத்தொடர்ந்து இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அதிர்ச்சியில் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் இறந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சோழவரம் அருகே உள்ள புதிய எருமைவெட்டி பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (59). சோழவரம் ஒன்றிய அ.தி.மு.க. சிறுபான்மை பிரிவு செயலாளராக இருந்தார். இவர் புதிய எருமைவெட்டி பாளையம் 11-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தார். இதையடுத்து தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்யவும் வந்தார்.
அப்போது அங்கிருந்த கூட்டணி கட்சியினர் 11-வது வார்டு த.மா.கா.வை சேர்ந்த லலிதாவுக்கு ஒதுக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தனர்.
இதனால் ராஜேந்திரனும், அவருடன் வந்த ஆதரவாளர்களும் ஏமாற்றம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து மனமுடைந்த ராஜேந்திரன், அங்கிருந்தவர்களுடன் சோகத்துடன் பேசிக் கொண்டு இருந்தார்.
அப்போது ராஜேந்திரன் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராஜேந்திரன் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment