சென்னை:
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
மத்திய அரசு குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்தியதை தொடர்ந்து நாடு முழுவதும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தில்லியில் இதற்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது போலிஸார் தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தமிழகத்தை பொறுத்த வரை திமுக சார்பில் செவ்வாயன்று அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஸ்டாலின் உட்பட திமுகவின் பல்வேறு முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதன் காலை 10.30 மணிக்கு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், ஸ்டாலின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment